அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Friday, February 19, 2016

நம் விவசாயிகளை பாதுகாக்க "கோடை-2016


என்ன நண்பர்களே நம் விவசாயிகளை பாதுகாக்க "கோடை-2016" என்னும் பேரில் இரண்டுமாத இயக்கம் ஒன்றினை மக்களிடம் கொண்டு சேர்ப்போமா...?
இவ்வளவு நாட்கள் பெருமை க்கு பினாயில் (பெப்ஸி,கோக்,மிரான்டா,ஃபேன்டா,மற்றும் பல) குடித்தது போதும்.,.இனியாவது திருந்துவோம்..இல்லையாயின் மூச்சு வாங்கக்கூட பன்னாட்டு வணிகர்களிடம்தான் மன்றாட வேண்டும்.

நண்பர்களே முடிந்தவரை இந்த செய்தியை அதிகமாக 
பகிரவும்..
நன்றி...

Thanks to source:
https://www.facebook.com/mohandass.samuel.9/posts/923813491072446



Saturday, January 23, 2016

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்


அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். 


மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.


Thanks to source:
https://www.facebook.com/photo.php?fbid=870214849765644&set=a.123223904464746.21497.100003314110139&type=3&theater

Tuesday, September 1, 2015

செடியன் குளம் கிணற்றின் ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் !

 
அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாதி மத பேதமின்றி நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் வரத்து அதிகரித்தது. பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. மீண்டும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்தால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வழிந்து ஓடும் நிலை எட்டிவிடும்.

செடியன் குளத்தின் தென்கரையில் பழுதடைந்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் வழியே கசிந்து வீணாக வெளியேறும் குளத்தின் நீரை பாதுகாக்கும் பொருட்டு கிண்ணற்றின் அடியில் உள்ள ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக ஊழியர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

 
 
 
 
 
 

Tuesday, August 25, 2015

செடியன்குளம் - மீண்டும் நினைவுறுத்துகிறோம்


 Photo courtesy: http://www.adirainews.net/

கடந்த வருடம் நிறைந்த செடியன்குளத்தின் நீரை, தொடர்ந்த பெரும் நீர் கசிவினை தடுத்து பாதுகாக்க இயலாமல் போனதால் செடியன்குளம் வெகுசீக்கிரமே வறண்டு போனதை தொடர்ந்து, குளத்தின் நீர் வெளியேற்றுப்பாதையை செப்பனிடக்கோரி பலராலும் கோரிக்கை வைக்கப்பட்டன.


இந்நிலையில், இந்த வருட மழைக்கு முன்பிருந்தே அதே கோரிக்கைகள் மீண்டும் நினைவுறுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இருநாட்கள் பெய்த மழையால் குளம் மீண்டும் ஓரளவு நிறைந்துள்ளது. மழையை பொழிவித்த எல்லாம் வல்ல ரஹ்மானுக்கே புகழனைத்தும்.


குளத்தின் நீர்மட்டம் மேலும் உயரும் முன்பு, போர்க்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள நீர் வெளியேற்று பாதையை சரி செய்து, இந்த வருட மழை நீரை நீண்ட நாள் சேமித்திடும் நோக்குடன் பராமரிப்பு பணிகளை துவங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் மீண்டும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.


இப்போது இல்லையேல் குளம் நிறைந்து கசியத் துவங்கினால் மீண்டும் இவ்வருடத்தில் எப்போதும் சரிசெய்திட முடியாது என்ற நிலையுள்ளதால் தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) போன்ற தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி, பணிகள் விரைந்து முடிந்திட களமிறங்க கேட்டுக் கொள்கின்றோம்.


அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழைநீரை வீணடித்த குற்றத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும், மக்களின் நீண்ட நாள் பயன்பாட்டிற்காக மழைநீரை குளத்தில் சேமித்ததற்கான நன்மைகளை இறைவனிடம் பெற்றுக் கொள்ளவும் அனைவரும் முன்வருமாறு அன்புடன் நினைவூட்டுகின்றோம்.


முக்கிய வேண்டுகோள்: 
பிலால் நகரை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு செடியன்குள வடிகால் வாய்க்காலையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி தரவும் மறக்க வேண்டாம்.

 
அதிரையிலிருந்து
S.அப்துல் காதர்

Tuesday, July 28, 2015

செடியன்குளம் - ஒர் அவசர நினைவூட்டல்


நம்புங்கள், இது தான் இன்றைய செடியன் குட்டை, ஸாரி செடியன் குளம். 

சென்ற வருடம் அல்லாஹ்வின் அருள்மழை வர்ஷித்ததால் நிறைந்து வழிந்த குளத்தின் நீர் வெளியேற்றுப்பாதை சரியாக அடைக்கப்படாததால் தொடர்ந்து கசிந்து தண்ணீர் பெருமளவில் வெளியேறி இன்று ஓர் சாக்கடை குட்டை அளவிற்கு காட்சியளிக்கின்றது என்றாலும் இப்போதும் தினமும் நூற்றுக்கணக்காணோர் பயடைனந்து வருகின்றனர் என்ற நிதர்சனம் நிலவும் வறட்சியை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லா அனுதினக் காட்சிகள்.



சென்ற வருடம் குளத்து நீர் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தபோதே நாம் பலமுறை நடவடிக்கை வேண்டி கோரிக்கை வைத்தோம் அன்று செப்பனிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த மக்களுக்கு இதைவிட கூடுதலான நீர் தேங்கியிருந்து அவர்களின் மனதையும் உடலையும் நனைத்திருக்கும் அதன் நன்றிப்பெருக்கால் உங்களுக்கும் அல்லாஹ்விடம் மிகுந்த நற்கூலி கிடைத்திருக்கக்கூடும்.

சரி நடந்ததை விடுவோம் இனி நடக்கவிருப்பதை நன்மையாக்க முயல்வோம் 

தற்போது நமதூரிலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழை அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றது இன்ஷா அல்லாஹ் செடியன் குளம் நிறையுமளவுக்கு அல்லாஹ் இந்த வருடமும் மழையை இறக்கலாம் என்பதால் போர்க்கால நடவடிக்கையாக செடியன்குளத்தின் நீர் வெளியேற்றும் கிணற்றுப்பாதையை உடனடியாக செப்பனிட்டு இந்த வருட மழைநீரை தேக்கிவைத்து மக்களுக்கு நீண்டநாள் கோடையிலும் பயன்கிடைக்க செய்ய வேண்டுகிறோம்.


பிலால் நகர் வருடாவருடம் வெள்ளத்தால் பாதித்து வரும் நிலையில், செடியன் குளத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அதன் வடிகால் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றினாலேயே அமைதியாக ஓடிவிடும். அதற்கு மாற்றமாக இப்படி அடுப்படி ஊதாங்குழலை பதித்து பொங்கிப் பெருகும் வெள்ளநீரை கொண்டு செல்ல நினைத்தால் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படப்போவது பிலால் நகர் தான் என்பதால் உடனடியாக .இந்த ஊதாங்குழல் சைஸ் பைப்புகளை அகற்றிவிட்டு வடிகால் வாய்க்காலை சுத்தப்படுத்தும் வழியை பார்ப்பதே சிறந்தது என சம்பந்தப்பட்டோருக்கு சொல்லி வைக்கின்றோம். 

Thursday, April 23, 2015

யார் மாற்றுத் திறனாளிகள்? வியக்க வைக்கும் இரு ஒருவர்!


ஈருடல் ஓருயிர், நான் பாதி நீ பாதி, என்னில் உன்னை காண்கிறேன் என்பன போன்ற வசனங்களையும் கவிதைகளையும் கேட்கும் போது வார்த்தை ஜாலங்களின் ஈர்ப்பு கற்பனை உலகில் மிதந்த செய்திருக்கும் ஆனால் கற்பனைக்கு மேல் நிஜமாய் வாழும் இந்த இரு மனிதர்களை பற்றி அறிந்தால் உங்கள் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் இனிய அதிர்வுகளை உங்கள் கண்கள் தாமே முன்வந்து சாட்சி சொல்லும்.

'அவருக்கு நான் கைகள், எனக்கு அவர் கண்கள்' என சிலாகித்து சொன்ன இரு அசாத்திய சாதனை மனிதர்களை பற்றி கல்ஃப் நியூஸ் பத்திரிக்கையில் வாசித்தவுடன் மேலும் அறிந்து கொள்ள இணைய பக்கங்கள் பல உதவின, அதன் நீட்சியே இச்சிறு தொகுப்பு.

தென்கிழக்கு சீனா, ஹெபய் மாகாணம், ஜின்ஜியாங் பிரதேசத்தின் 'ஏலி' என்ற குக்கிராமத்தில் பிறந்து இன்று உலக மாந்தர்களால் நேசிக்கப்படும் நண்பர்கள் ஜியா ஹய்ஸியா (வயது 53) மற்றும் ஜியா வென்கி (வயது 54). இவர்களில் ஹய்ஸியா பிறவியிலேயே கண்புரை நோயால் ஒரு கண்ணில் பார்வையை இழந்தவர் மற்றொரு கண்ணின் பார்வையும் 2000 ஆம் ஆண்டில் தொழிற்சாலையில் பணியாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் பறிபோனது. வென்கி 3 வயது பருவத்திலேயே உயர்அழுத்த மின்சாரம் தாக்கி தனது இரு கைகளையும் தோள் புஜங்கள் வரை முழுமையாக இழந்து வளர்ந்தவர், இவ்விருவரும் பள்ளிப்பருவம் முதல் நண்பர்கள்.

இவ்விருவராலும் என்ன செய்துவிட முடியும்? என்ற கேள்விக்குறியை ஏன் செய்ய முடியாது என்ற ஆச்சரியக்குறியாக மாற்றி செயல் இது தான். ஹய்ஸியாவுக்கு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டபொழுது உடல்நலமில்லா மனைவியும் நான்கு வயது மகனுமிருந்தனர். இவர்களையும் காப்பற்ற வேண்டும் தானும் பிறருக்கு சுமையாகவும் அமைந்துவிடக்கூடாது என்ற உந்துதலால் நண்பர்கள் இருவரும் தங்களின் வாரிசுகளின் எதிர்கால நலன், கிராமத்தின் நலன், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உழைப்புக்காக பிராந்திய அரசிடமிருந்து கிடைக்கும் சொற்ப ஊக்கத்தொகை ஆகியவற்றை கருதிற்கொண்டு கூட்டாக ஒரு முடிவெடுக்கின்றனர்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் தங்களின் பிராந்திய அரசிடமிருந்து சுமார் 8 ஏக்கர் தரிசு நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்றனர். அதில் இன்று வரை சுமார் 3 ஏக்கர் நிலத்தில் 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து தங்கள் பகுதியை பசும்சோலையாக மாற்றியதுடன், தங்கள் கிராமத்தை வெள்ளப் பெருக்கிலிருந்தும் காத்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி வாழ மறைமுகமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவியுள்ளனர்.

தினமும் காலை 7 மணிக்கு தங்களின் அன்றாட பணியை கைகோடாறி, சிறிய கடப்பரையை சுமந்து கொண்டு துவங்கும் இவர்களின் செயல் ஆரம்பத்தில் வழமைபோல் சக கிராமத்தினரின் ஏளனத்திலிருந்து தப்பவில்லை ஆனால் இன்று அதே கிராமத்தினர் வியந்து தாமாக உதவி செய்கின்றனர், இதுவே அவர்கள் 'சீன ரத்னா'வை பெற்றதற்கு சமன். 

தினமும் சிறு தொகைக்கு வாங்கப்படும் மரக்கன்றுகளையும், பெரிய மரங்களிலிருந்து கழிக்கப்படும் கிளைகளையும் மீண்டும் நடுகின்றனர். அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர் எல்லாம் ஒரு நேர்த்தியான திட்டமிடல்களின் அடிப்படையில் மிகவும் சீராக அவர்களின் சக்திக்கு உட்பட்டு நடைபெறுகின்றன. இருவர் ஒருவராய் மாறி சுற்றுச்சூழலுக்கு தொண்டாற்றும் நண்பர்களின் உழைப்பு இன்று உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

தற்போது இவர்களுடைய சாதனை உலக மீடியாக்களின் வெளிச்சத்தில் பட்டு பாரெங்குமிருந்து பாராட்டுக்களும் உதவிகளும் குவிந்தவண்ணமுள்ளன. மேலும் ஹய்ஸியாவுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்திடவும் மருத்துவமனை ஒன்று முன்வந்துள்ளது, கண்தானம் கிடைப்பதற்கு அவருடைய முறைக்காக காத்திருக்கிறார் ஹய்ஸியா.

வார்த்தைகளில் வடிப்பதைவிட புகைப்படங்களை பார்த்துவிட்டு உரக்கச் சொல்லுங்கள் உண்மையில் மாற்றுத் திறனாளிகள் அவர்களா? அல்லது உடல் குறையின்றி எல்லாமிருந்தும் காடு, கரை, வயல், வனங்களை (வளர்ச்சியின் பெயராலும்) அழித்தொழிப்பவர்களா?

நல்லோர் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும் வாழ்த்துவோம்! வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடன் கரம் கோர்ப்போம்!! கை தூக்கி விடுவோம்!!!

தொகுப்பு:
அதிரைஅமீன்




















Tuesday, April 7, 2015

இவரை நாமும் அறியவேண்டும்

ஏற்கனவே நமது தளத்தில் இவரை பற்றி 'மக்களின் பாரத ரத்னா' என்ற பெயரில் வெளியிடப்பட்ட பதிவு.
பொதுவாக தனி ஒரு மனிதனால் எந்தவொரு செயலிலும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாது, ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி தனி ஒரு மனிதன் நினைத்து உத்வேகத்தால் செயல்பட்டால், எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஒரு சாமானியன், குக்கிராமவாசி இன்று மத்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெறப்போகிறார். இந்த ஆண்டு இந்த பத்ம விருது பெற்றவர்களில் பலர் நிச்சயமாக அவர்களின் சேவைக்காக போற்றப்பட வேண்டியவர்கள். அதேநேரத்தில் சாமானியர்களும் அவர்களின் உன்னத சேவையால் இந்த உயரிய விருதை பெறமுடியும் என்ற வகையில், எங்கோ நாட்டின் மூலையில் உள்ள ஒரு சமூகசேவகரின் செயலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் அன் சங் ஹீரோ என்பார்கள். அதாவது சிலரின் உயர்ந்த சேவைகள் உலகுக்கே தெரியாதவகையில், அந்த மாமனிதர்களின் தியாகங்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும். அப்படி ஒருவரை தேடிப்பிடித்து, இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.

பத்மஸ்ரீ பட்டியலில் 36–வது எண்ணில் இருந்த காட்சிக்கு எளியவரான ஒரு பாமர மனிதர் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதியிடமிருந்து பத்மஸ்ரீ பட்டத்தை பெறப்போகிறார். யார் இந்த அருமனிதர்? என்பதை நாடு அறிந்தால்தான் அவரை மற்றவர்களும் பின்பற்ற முடியும். அவர் பெயர் ஜாதவ் மோலை பெயங். இந்தியாவின் வனமனிதர் என்று அழைக்கப்படுபவர். அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாத் மாவட்டத்தைச் சேர்ந்த மோலை கதோனி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். 1979–ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெருவெள்ளம் அந்த கிராமத்தையும், அதன்பக்கத்தில் உள்ள ஊர்களையும் அழித்துவிட்டது. அந்தநேரத்தில் அரசாங்கம் அந்த ஊரின் அருகில் உள்ள சந்த்பார் என்ற தரிசு பகுதியில் மரம் நடும் பணிகளில் பெயங்கையும் மற்றும் சில தொழிலாளர்களையும் ஈடுபடுத்தியது. மற்றவர்களெல்லாம் ஏதோ வேலை செய்தோம், கூலி கிடைத்தது என்று போய்விட்ட நிலையில், ஜாதவ் பெயங் மட்டும் அந்த பகுதியில் உள்ள ஏறத்தாழ 1,400 ஏக்கர் தரிசு நிலத்தையும் அடர்ந்த காடாக ஆக்குவேன் என்று உறுதிபூண்டு, முதலில் மூங்கில் மரக்கன்றுகளை நடத்தொடங்கி, தொடர்ந்து அனைத்து மரக்கன்றுகளையும் தனி ஆளாக நடத்தொடங்கினார். தன் பிழைப்புக்காக பசுமாடுகள், எருமைகளை வளர்த்து, அதன் பாலை வைத்து பிழைப்பு நடத்துகிறார். ஏழ்மை அவர் லட்சியத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. 1979–ம் ஆண்டு தொடங்கிய அவரது முயற்சியால், இன்று அந்தப்பகுதி அடர்ந்த காடாகிவிட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களைக்கொண்ட இந்த காடு இப்போது காண்டாமிருகங்கள், சிறுத்தைகள், யானைகள், முயல்கள், குரங்குகள், பறவைகள், பாம்புகள், கழுகுகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மாடுகள் என ஏராளமான மிருகங்கள், பறவைகளுக்கு வாழ்விடமாக ஆகிவிட்டது.

கிராமங்களில் நல்ல மாடு உள்ளூரில் விலை போகாதுஎன்பார்கள். அதுபோல, இவரது அரும்பெரும் முயற்சியைக்கண்டு முதலில் 2012–ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டில்தான் அவரை அழைத்து கவுரவப்படுத்தினார்கள். அதன்பிறகுதான் இவரை இந்தியாவில் அடையாளம் கண்டுகொண்டார்கள். தனி ஒரு மனிதன் என்றாலும், அவன் நினைத்தால் எந்த லட்சியத்தையும் நிறைவேற்றமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பெயங் முயற்சியையும், வாழ்க்கையையும் இந்தியா முழுவதும் அறியச்செய்து, எல்லா இடங்களிலும் இதுபோல காடுகளை மக்கள் உருவாக்க மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாமே!
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Thanks to: Adirai News